திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை; வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தகவல்


வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜனுக்கு திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டுஅலுவலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை
x
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜனுக்கு திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டுஅலுவலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை
தினத்தந்தி 27 Dec 2020 12:53 AM GMT (Updated: 27 Dec 2020 12:53 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு செய்தார். முன்னதாக அவரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வரவேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள்
புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சைபர் கிரைம், லஞ்ச ஒழிப்புத்துறை, தகவல் தொழில்நுட்பப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலைய ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், 6 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் குற்றச்செயல்களில் தொடர்புடைய நபர்கள் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 300 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக ரூ.60 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதனூர், சின்னகந்திலி, தோரணம்பதி மற்றும் லட்சுமிபுரம் ஆகிய 4 சோதனைச்சாவடிகளில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

தானியங்கி சிக்னல்
திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான இடங்களில் சிக்னல்கள் பொருத்தப்படும். தானியங்கி சிக்னல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்ட ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story