பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Dec 2020 5:04 AM GMT (Updated: 28 Dec 2020 5:04 AM GMT)

நாகூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

ரோந்து பணி

இதுகுறித்து துர்கா தேவி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெத்தி சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இதில் அவர்கள், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் விவேக் (25), காரைக்கால் தளத்தெருவை சேர்ந்த குமார் மகன் சேதுமணி (23), திருவாரூர் கொரடாச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் விஜய் (28) என்பதும், இவர்கள் தான் துர்காதேவியிடம் கத்தியை காட்டி 1 பவுன் சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story