9 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்


9 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 28 Dec 2020 5:41 AM GMT (Updated: 28 Dec 2020 5:41 AM GMT)

9 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

கடத்தூர்,

கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் விழும்போது சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து குளித்து விட்டு செல்வார்கள். மேலும், அங்கு விற்கப்படும் சூடான சோளக்கதிர், மீன் வறுவல்கள், ஆகியவற்றை வாங்கி ருசித்தும், தாங்கள் கொண்டு வரும் உணவு வகைகளை அங்குள்ள புல் தரையில் அமர்ந்து சாப்பிட்டும் செல்வார்கள். அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள்.

9 மாதங்களுக்கு பிறகு...

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்ல. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கொடிவேரி அணையும் மூடப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு அணை, பூங்காக்களை பார்க்க அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் அணையில் சிறிதளவே தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில், தற்போது பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், கொடிவேரி அணையில் தண்ணீரானது அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அணையில் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக நேற்று குவிந்தனர்.

அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து அணையின் நுழைவு வாயிலில் பொதுப்பணித்துறை மற்றும் கடத்தூர் போலீஸ் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

Next Story