சேலத்தில் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


சேலத்தில் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Dec 2020 5:41 PM GMT (Updated: 28 Dec 2020 5:41 PM GMT)

சேலத்தில் திருமணமான 6 மாதத்தில் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

சேலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மகன் பூபதி (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த காயத்ரி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். காயத்ரி சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவி இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காயத்ரி பக்கத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வேலை முடிந்து இரவு பூபதி வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்காததால் அக்கம், பக்கத்தினர் அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் வந்து வீட்டின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை.


பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது பூபதி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதனர். பின்னர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் நகைக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story