பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி


பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 29 Dec 2020 8:00 PM GMT (Updated: 29 Dec 2020 7:41 PM GMT)

பள்ளிக்கரணையில், தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் என்ஜினீயர் பலியானார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சென்னையை அடுத்த பொழிச்சலூர் பாண்டுரங்கநகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் வேந்தன் (வயது 24). இவர் பெருங்குடியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பெருங்குடியில் இருந்து பல்லாவரம் நோக்கி ரேடியல் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை கைவேலி பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புசுவரின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

சாவு
இதில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வந்த அவருக்கு முகம், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதில் மயங்கினார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்
அதே போல் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆஷா, (51). இவர் கடந்த 18-ந் தேதி இருசக்கர வாகனத்தில் ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story