சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து


சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 30 Dec 2020 5:56 AM GMT (Updated: 30 Dec 2020 5:56 AM GMT)

சித்தோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பவானி,

பவானியை அடுத்த சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் அந்த பகுதியில் கழிவு பஞ்சு மில் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த மில்லில் நேற்று 14 பேர் பணியில் இருந்தனர். மதியம் 1.30 மணி அளவில் மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து கழிவு பஞ்சில் தீ மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

போலீசார் விசாரணை

இதை கண்டதும் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

உடனே இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story