ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்: மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்


ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்: மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 31 Dec 2020 10:54 PM GMT (Updated: 31 Dec 2020 10:54 PM GMT)

‘‘மக்களுக்கு ரூ.2,500 கொடுப்பதை தடுக்கவில்லை. ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

பெரம்பலூர்,

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 7 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் உள்ளிட்ட 14 இடங்களிலும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:- அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்த ஆட்சி கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வாக்குறுதி அளிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நம்மால் பட்டியல் போட முடியும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி தருவதாக ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கிடப்பில் போடப்பட்டதிட்டங்கள்

ேமலும் அரியலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு இதுவரை முடிவு காணப்படவில்லை. வெள்ளாறு-கொள்ளிடம் பகுதிகளில் லாரிகளில் விடிய, விடிய நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை.

தூர்வாரியதில் பெரிய சாதனை செய்ததாக எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் கண்டிராதீர்த்தம் ஏரியை தூர்வாருவதாக சொல்லி நிதியை ஒதுக்கி கொள்ளையடித்து இருக்கிறார்கள். சுமார் ரூ.4 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவுள்ள இடத்தில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வருகிறது என்ற அறிவிப்பு, பாடாலூர், இரூர் ஊராட்சிகளை உள்ளடக்கிய 110 ஏக்கர் பரப்பளவில் ஜவுளிப்பூங்கா திட்ட அறிவிப்பு, அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர்.

அரியலூர் முதல் சேலம் வரை ெரயில்வே திட்டம் கொண்டு வருவதற்காக அப்போதைய மத்திய மந்திரி ஆ.ராசா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதையும் கிடப்பில் போட்டுவிட்டனர்.

தி.மு.க.வுக்குஅவசியமில்லை

அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் பேசியிருக்கிறார். அ.தி.மு.க.வை உடைக்க நானோ, தி.மு.க.வோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு சொல்ல விரும்புகிறேன்.

அ.தி.மு.க.வின் 4 ஆண்டுகால முதல்-அமைச்சராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ தி.மு.க.வோ கருதவில்லை. ‘நான் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பா.ஜ.க.வே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று ஓ.பன்னீர்செல்வமே பிரசாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க, இந்த வெட்கத்தை மறைக்க, தி.மு.க. மீதும் என் மீதும் பழி போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

தி.மு.க. குடும்ப கட்சியா?

தி.மு.க.வை குடும்பக்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். ஏழைகளுக்கு கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு ரூ.2,500 தரவில்லை, தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காக கொடுக்கிறார். அ.தி.மு.க. டோக்கன் கொடுத்து அவர்தான் மாட்டிக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் வரை தூக்கம் இல்லை. இது ஒரு இருண்ட காலம். அது இன்றோடு முடியவேண்டும். இன்று (நேற்று) 2020-ம் ஆண்டின் இறுதிநாள். நாளை (இன்று) 2021 புத்தாண்டு பிறக்கும்போது அது தமிழகத்துக்கு புதிய விடியலை தரும் நாளாக விடியட்டும்.

இவ்வாறு அவர் பேசினர்.

முன்னதாக அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் குன்னம் ராஜேந்திரன் (பெரம்பலூர்), சிவசங்கர் (அரியலூர்) மற்றும் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story