கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை திரளானோர் பங்கேற்பு


கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை திரளானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2021 4:55 AM GMT (Updated: 1 Jan 2021 4:55 AM GMT)

குமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு, புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறைவாட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும், அதில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

திரளானோர் பங்கேற்பு

கருங்கல் சரல்கோட்டை ஆயர் மண்டல திருச்சபை ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கு குமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா தலைமையில் புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் நாகர்கோவில் கற்கோவில், ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், பிலிப்ஸ்புரம் ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மாநகர பகுதியில் பைக்ரேசை தடுக்க போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் கண்காணிப்பு

நாகர்கோவில் பார்வதிபுரம் பாலம், சுசீந்திரம்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, மார்த்தாண்டம் மேம்பாலம் உள்பட மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story