நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் மும்பை கோர்ட்டு கருத்து


நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் மும்பை கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 2 Jan 2021 1:18 AM GMT (Updated: 2 Jan 2021 1:18 AM GMT)

அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகளை இணைக்கும் போது நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.

மும்பை, 

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் ஒரு பகுதியை சமீபத்தில் கோர்ட்டு அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5-வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும் ஒரே வீடாக மாற்றும் பணியை மேற்கொண்டார்.

இதில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு மும்ைப மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி நடிகை கங்கனா ரணாவத் மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிபதி எல்.எஸ். சவான் விசாரணை நடத்தினார். கடந்த வாரம் அவர் மனுவை தள்ளுபடி செய்தார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம் தற்போது தெரியவந்து உள்ளது. அதாவது, நடிகை கங்கனா ரணாவத் தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் மனுதாரர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story