திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி


தேவா
x
தேவா
தினத்தந்தி 2 Jan 2021 10:56 PM GMT (Updated: 2 Jan 2021 10:56 PM GMT)

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மின்வாரிய ஊழியர்
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவா (வயது 45). இவர், திருவொற்றியூர் காலடிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் போர்மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து வந்த தகவலின்படி தேவா மற்றும் சக ஊழியர்கள் எழுத்துக்காரன் தெருவுக்கு சென்று சோதனை செய்தனர். அதில் பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின் வயர் பழுதாகி இருந்தது தெரிந்தது.

மின்சாரம் தாக்கி பலி
இதையடுத்து பழைய மின்வயரை அகற்றிவிட்டு புதிய வயரை பொறுத்த துளைபோடும் எந்திரம் கொண்டு தேவா பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தேவா தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தேவாவுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story