கறம்பக்குடியில் சிவன்கோவில் குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்


கறம்பக்குடியில் சிவன்கோவில் குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
x
தினத்தந்தி 2 Jan 2021 11:48 PM GMT (Updated: 2 Jan 2021 11:48 PM GMT)

கறம்பக்குடி சிவன் கோவில்குளத்தை ஆக்கிரமித்த கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்றும், இதேபோல் திருவரங்குளம் முனீஸ்வரர்கோவில் அருகே உள்ள பட்டமரத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கறம்பக்குடி,

கறம்பக்குடியில் 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்கு நன்கு வடிவமைக்கப்பட்ட படித்துறைகளுடன் கூடிய குளம் உள்ளது. சிவன் கோவில் மற்றும் அருகில் உள்ள கருப்பர்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வர். கோடைகாலத்திலும் இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும். இதனால் கறம்பக்குடி பகுதி மக்கள் குளிக்க இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஈமச்சடங்குகள் இந்த குளக்கரையில் நடைபெறுவது வழக்கம். தற்போது பெய்துள்ள மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதேநேரத்தில் சீமை கருவேலமரங்களும் அதிக அளவில் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளது.

மேலும் குளத்தில் தாமரை செடிகள் படர்ந்துள்ளதால்அந்த இலைகள் அழுகி தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் இருந்தும், அதில் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் வேறு வழியின்றி அங்கு குளித்துவிட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களையும், தாமரை செடிகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் மரம் ஒன்று பட்டுப்போய் காணப்படுகிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இந்த மரத்தை வெட்டி அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story