தேனி மாவட்டத்தில் 4 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வினியோகம்


கம்பத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டுதாரர் ஒருவருக்கு ஜக்கையன் எம்.எல்.ஏ. வழங்கியபோது
x
கம்பத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டுதாரர் ஒருவருக்கு ஜக்கையன் எம்.எல்.ஏ. வழங்கியபோது
தினத்தந்தி 5 Jan 2021 4:55 AM GMT (Updated: 5 Jan 2021 4:55 AM GMT)

தேனி மாவட்டத்தில் 4 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.2,500 வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக சில நாட்களாக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள 4 லட்சத்து 8 ஆயிரத்து 385 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2, 500 வழங்கப்படுகிறது. 517 ரேஷன் கடைகளில் இவை வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அரசு அறிவித்தபடி பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு முழு கரும்பும், ரூ.2,500-ம் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்தனர். தேனி, போடி போன்ற நகர்ப்புற பகுதிகளில் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்கு மக்கள் கடைக்கு சென்று பரிசு தொகுப்பை பெற்றுக் கொண்டனர். இதனால், கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அ.தி.மு.க. கொடிகள் அகற்றம்
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் பலர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை வரிசையில் நிற்க வைத்து பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ரேஷன் கடைகளின் முன்பு அ.தி.மு.க. சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் அ.தி.மு.க. கட்சிக் கொடிகள் காலை நேரத்தில் கட்டப்பட்டு இருந்தன. அவற்றுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் அ.தி.மு.க. கொடிகள் அகற்றப்பட்டன.

கம்பம்
கம்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கம்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் ஜக்கையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ெபாங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாங்கம், அ.தி.மு.க. கம்பம் நகர செயலாளர் ஜெகதீஸ் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர்
இதேபோல் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடலூர் நகரசபை முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. நகர 
செயலாளருமான அருண்குமார் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சின்னமாயன், உழவர்பணி கூட்டுறவு சங்க தலைவர் கரிகாலன், அவை தலைவர் துரை, துணைச்செயலாளர் பாலை ராஜா, பொருளாளர் நடராஜன் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story