துறையூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் சாவு


துறையூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் சாவு
x
தினத்தந்தி 6 Jan 2021 1:11 AM GMT (Updated: 6 Jan 2021 1:11 AM GMT)

துறையூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவர் கண்ணனூரை சுற்றி உள்ள கிராமபுறத்தில் மாட்டு வைத்தியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கண்ணனூர் மெயின் ரோட்டில் இவரது பெற்றோர் இலை, வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கனகராஜ் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறினார்.

கீழே விழுந்து சாவு

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து கனகராஜின் உடலை வீட்டிற்கு எடுத்துவந்தனர்.

தாய் மரணம்

இதற்கிடையே கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கனகராஜின் தாய் சரஸ்வதி அம்மாள் (81), மகன் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியில் படபடப்பு மயக்கம் அடைந்தார். அவரை உறவினர்கள் ஆசுவாசப்படுத்தி, வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அதற்குள் மகன் இறந்த செய்தியைக் கேட்டு மகனின் முகத்தை பார்த்த அவர் அதே இடத்தில் மயக்கம் அடைந்து உயிரிழந்தார். ஒரே சமயத்தில் தாய் மற்றும் மகன் இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Next Story