இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத தனியார் நிறுவன சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை


இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத தனியார் நிறுவன சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2021 2:24 AM GMT (Updated: 7 Jan 2021 2:24 AM GMT)

இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீசு ஒட்டினர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தென்னதிரையன் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது சித்திக் (வயது 26). இவர் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சியில் பட்டேல் டிம்பர் என்ற மர அரவை நிறுவனத்தில் வேலை செய்தபோது மரம் விழுந்ததில் உயிரிழந்தார்.

இதையொட்டி அவரது பெற்றோர் தொழிலாளர் துறை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனியார் நிறுவனம் முகமது சித்திக் குடும்பத்திற்கு ரூ.4½ லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த உத்தரவினை சம்பந்தப்பட்ட நிறுவனம் அமல்படுத்தாததால் முகமது சித்திக்கின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பட்டேல் டிம்பர் நிறுவனம் முகமது சித்திக் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 38 ஆயிரத்து 875-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினை அமல்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின் படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி எழுத்து மூலமாக அந்த நிறுவனத்திற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் மூலம் 4 முறை நேரிலும் வலியுறுத்தப்பட்டது.

ஜப்தி நடவடிக்கை

ஆனாலும் அந்த நிறுவனம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் நேற்று திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று அந்த நிறுவனத்தின் மதில் சுவர் மற்றும் கதவுகளில் இழப்பீடு தொகை செலுத்தாததால் நிறுவனத்தின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட இருப்பதற்கான நோட்டீசை ஒட்டினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story