கும்பகோணத்தில் தொடர் மழையால் தொழிலுக்கு இடையூறு: பொங்கல் சீசனில் கேள்விக்குறியாகும் மண்பாண்ட தொழிலாளர்களின் வருமானம்


கும்பகோணத்தில் தொடர் மழையால் தொழிலுக்கு இடையூறு: பொங்கல் சீசனில் கேள்விக்குறியாகும் மண்பாண்ட தொழிலாளர்களின் வருமானம்
x
தினத்தந்தி 7 Jan 2021 3:43 AM GMT (Updated: 7 Jan 2021 3:43 AM GMT)

கும்பகோணத்தில் தொடர் மழையால் மண்பாண்ட தொழிலுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொங்கல் சீசனில் கிடைக்கும் வருமானமும் கேள்விக்குறியாகி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கும்பகோணம்,

தமிழர்களின் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. பண்பாட்டு அடையாளமான பொங்கல் பண்டிகையில் மண்பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் விற்பனை அமோகமாக நடைபெறும்.

மண்பானை உற்பத்தி தொழிலை நம்பி ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகை காலம் தான் இவர்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கும் சீசனாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மாத்தி, அண்ணலக்ஹாரம், நாதன்கோவில், பம்பப்படையூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழையால் இடையூறு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் மண் அடுப்பு, மண்பானை போன்றவற்றை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

இந்த ஆண்டு கும்பகோணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மண்பாண்ட தொழிலுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி, மண்பாண்ட தொழிலாளர்களின் பொங்கல் சீசன் வருமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுகுறித்து நாதன்கோவில் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

போதுமான மண் கிடைக்கவில்லை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொங்கல் பண்டிகையின் போதுதான் மண்பாண்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகும். போதுமான மண் கிடைக்காததால், கிடைத்ததை வைத்து மண்பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

பொங்கல் பண்டிகைக்காக அடுப்பு, மண்பானைகள் தயார் செய்து வைத்து இருக்கிறோம். தொடர் மழையால் தயார் செய்து வைத்துள்ள மண்பாண்டங்களை சூளையில் வைத்து வேக வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. சூளைக்கு தேவையான விறகுகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. பானை செய்ய பயன்படும் மண்ணை தகுந்த பதத்தில் வைத்திருப்பது மழை காலத்தில் சிரமமாக உள்ளது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

தயார் செய்துள்ள அடுப்புகள், பானைகள் ஈரப்பதத்தினால் உருமாறி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.

Next Story