கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டார்; பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றுகிறார்; நடிகை சரோஜாதேவி பேட்டி


சரோஜாதேவிக்கு அவரது மகன் உள்பட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்
x
சரோஜாதேவிக்கு அவரது மகன் உள்பட குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்
தினத்தந்தி 8 Jan 2021 12:21 AM GMT (Updated: 8 Jan 2021 12:21 AM GMT)

கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டு பிரதமர் மோடி சிறப்பாக மக்கள் பணியாற்றுவதாக நடிகை சரோஜாதேவி கூறினார்.

சரோஜாதேவி பிறந்தநாள்
நடிகை சரோஜாதேவி பெங்களூரு மல்லேசுவரம் 11-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி சரோஜாதேவியின் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கலந்துகொண்டு சரோஜாதேவி சாமி தரிசனம் செய்தார். 

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளேன். எனக்கு இன்னும் சின்னத்திரை, பெரியதிரைகளில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சிறந்த கதையம்சம் உள்ள படங்கள் மற்றும் நாடகங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன். இதில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் நடித்த காலக்கட்டங்களில் உள்ள சினிமாவுக்கும், இப்போதைய சினிமாவுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. அந்த காலத்தில் கதைகளை தேர்வு செய்து நடித்தோம். இந்த கால சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

திடமான முடிவு எடுத்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். பின்னர் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஒரு திடமான முடிவை எடுத்து உள்ளார். 

அவரது முடிவை நான் பாராட்டுகிறேன். கமல்ஹாசனும் அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்று உறுதியாக சொல்ல முடியாது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்ப்போம். சில நேரங்களில் படங்கள் தோல்வியும் அடையும். அதுமாதிரி தான் அரசியலில் நடிகர்கள் வெற்றியும், தோல்வியும் அடைவார்கள். எம்.ஜி.ஆர். எங்களுக்கு ஒரு தெய்வம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் வாழ்நாளில் செய்த புண்ணியம்.

மோடிக்கு பாராட்டு
நாட்டு மக்கள் கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த வேளையில் கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடி திறம்பட கையாண்டு வருகிறார். அவர் சிறப்பான முறையில் மக்கள் பணியும் ஆற்றி வருகிறார்.

அவருக்கு பாராட்டுகள். கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் போது என்னை பிரசாரம் செய்ய கட்சியினர் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லாததால் நான் யாருக்கும் ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய செல்வது இல்லை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனாலும் நான் அரசியலுக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story