கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை மே.மாத்தூரில் 20 செ.மீ. மழை கொட்டியது


கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை மே.மாத்தூரில் 20 செ.மீ. மழை கொட்டியது
x
தினத்தந்தி 8 Jan 2021 6:13 AM GMT (Updated: 8 Jan 2021 6:13 AM GMT)

கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 20 செ.மீ. மழை கொட்டியது. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இந்த பருவமழை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்து விடும் நிலையில், நடப்பாண்டில் வடகிழக்கில் இருந்து தொடர்ந்து வீசி வரும் காற்றால் வடகிழக்கு பருவமழை காலம் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

விடிய விடிய...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.

மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. அதன் பிறகு காலையில் வெயில் அடிக்க தொடங்கியது. சுட்டெரித்த வெயிலால் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது.

அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்

விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழையால் மன்னம்பாடி - எடையூர் சாலையின் குறுக்கே உள்ள உப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வேப்பூர் அருகே உப்பு ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் அவ்வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதேபோல் விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு, சாத்துக்கூடல்கிராமங்களில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வழியாகவும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

கருவேப்பிலங்குறிச்சி-டி.வி.புத்தூர் இடையே செல்லும் வெள்ளாற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் அருகில் உள்ள சாலையில் மண் உள்வாங்கி, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மழைவெள்ளத்தால் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

வீடுகளுக்குள் புகுந்தது

வீராணம் ஏரிக்கு செல்லும் செங்கால் ஓடையில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் செங்கால் ஓடையின் குறுக்கே பா.புத்தூர் பகுதியில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் சென்று தங்கினர். இதில் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.

மேலும் சேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் விருத்தாசலம் மணிமுக்தாறு மற்றும் பல்வேறு ஓடைகள் வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு மழைவெள்ளம் கரைபுரண்டு வந்ததால், அணைக்கட்டில் இருந்து மதகுகள் வழியாக கடலுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெய்த மழையால் வெட்டுவாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. மேலும் வீரானந்தபுரம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 46 அடியை எட்டியுள்ளது. மேலும் ஏரிக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னைக்கு தண்ணீர்

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்.மதகு மூலம் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 62 கன அடி அனுப்பப்படுகிறது. மேலும் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணைக்கட்டு நிரம்பியதால், வெலிங்டன் ஏரிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகபட்சம்

இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, திட்டக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 20.6 செ.மீட்டரும், குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 1.7 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் சென்டி மீட்டரில் வருமாறு:-

வேப்பூர்-18

காட்டுமயிலூர்-17.2

பெலாந்துரை-15.8

ஸ்ரீமுஷ்ணம்-10.8

புவனகிரி-7.8

விருத்தாசலம்-7.7

அண்ணாமலைநகர்-6.9

பரங்கிப்பேட்டை-6.6

சேத்தியாத்தோப்பு-6.3

லால்பேட்டை-6

காட்டுமன்னார்கோவில்-5.7

சிதம்பரம்-5.3

குறிஞ்சிப்பாடி-5.2

கடலூர்-4.1

தொழுதூர்-2.7




Next Story