பெண்ணாடம் அருகே அணைக்கட்டில் மூழ்கி வாலிபர் பலி


பெண்ணாடம் அருகே அணைக்கட்டில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 Jan 2021 6:06 AM GMT (Updated: 10 Jan 2021 6:06 AM GMT)

பெண்ணாடம் அருகே அணைக்கட்டில் மூழ்கி வாலிபர் பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சூர்யா (வயது 21). டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள பெலாந்துறை அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. இதுபற்றி அறிந்த சூர்யா, தனது நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு சென்று குளிக்க முடிவு செய்தார்.

அதன்படி நேற்று அவர் தனது நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் அணைக்கட்டின் ஓரமாக நின்று குளித்த போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வாக்குவாதம்

இதற்கிடையே அங்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூர்யாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது பெண்ணாடம் போலீசார், உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story