பறவை காய்ச்சல் எதிரொலி: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 2 ஆயிரம் கோழிப்பண்ணைகள் தீவிர கண்காணிப்பு


பறவை காய்ச்சல் எதிரொலி: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 2 ஆயிரம் கோழிப்பண்ணைகள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 2:13 PM GMT (Updated: 10 Jan 2021 2:13 PM GMT)

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் கோழிப்பண்ணைகள் கண்காணிக்கப்படுகிறது.

வேலூர்,

கேரள மாநிலத்தில் ஆலப்புலா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் வாத்துகளில் பறவைக்காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது அங்கும் பறவை காய்ச்சல் ஏற்படும்் அபாயம் உள்ளது,

இதனால் தமிழக கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து, முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

வடமாநிலங்களில் திடீரென காகங்கள் இறந்து தரையில் விழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வீடுகளில் வசித்து வந்த கோழிகள் மர்மமான முறையில் இறந்து வருகிறது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோழிபண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோழிப்பண்ணைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூர் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-

கேரளாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன.

இந்தப் பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பண்ணையின் உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே கோழி பண்ணை உரிமையாளர்கள் பண்ணையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு வாகனங்களை சுத்தம் செய்ய வேண்டும். பண்ணை அருகே தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை அருகே பிற பறவைகள் தஞ்சம் அடைவதை தடுக்க வேண்டும். கோழிகளுக்கு ஏதாவது தொற்று ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுக வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story