ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்


ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2021 3:24 PM GMT (Updated: 10 Jan 2021 3:24 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளுடன் பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் ரெகுநாதபுரத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ரெகுநாதபுரம் சாலையில் உள்ள வல்லபை அய்யப்பன் ஆலயத்திற்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் சாரட் வாகனத்தில் ஏறி அங்கிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினருடன் ஊர்வலமாக முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அங்கு பெண்கள் 508 பானைகளில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. அவர்களுடன் இணைந்து பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பொங்கலோ பொங்கல் எனக்கூறி பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவருக்கு அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஏர் கலப்பையை வழங்கி வாழ்த்தினர். தொடர்ந்து அவர் பேசியதாவது:- தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விழா தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். மத்திய அரசு, தமிழகத்திற்கு தாராளமாக நிதிஉதவிகளை வழங்கி வருகிறது. மீன்வளம், வேளாண்மை, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அதிகஅளவில் நிதி ஒதுக்கி வழங்கி உள்ளோம்.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 22 புனித தீர்த்தங்களில் நீராடுவதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஊராட்சிகளின் அதிகாரத்தை தி.மு.க. தவறாக கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறது. மத்திய, மாநில அரசுகளை குறை சொல்வதை தி.மு.க. வாடிக்கையாக கொண்டுள்ளது.

ரெகுநாதபுரத்தில் மிகப்பிரமாண்டமாக விழா ஏற்பாடு செய்த மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.நாகேந்திரனை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து தி.மு.க. மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏராளமானோர் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில ஊடகப்பிரிவு தலைவரும் மூத்த வழக்கறிஞருமான குப்புராமு, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் குட்லக் ராஜேந்திரன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் டாக்டர் குட்லக் ராகேஷ், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பா.ஜ.க. மாநில நிர்வாகி பட்டணம்காத்தான் முருகன், பா.ஜ.க. மூத்த நிர்வாகியும் மாவட்ட தலைவருமான முரளிதரன், மாநில துணைத்தலைவர் சுப. நாகராஜன், பா.ஜ.க. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் தவமணி, மாநில நிர்வாகி ஆத்மா கார்த்திக், மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீஸ், ஓ.பி.சி. மாவட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன், மாவட்ட இளைஞரணி செயற்குழு சுவாமிநாதன், ஓ.பி.சி. மாவட்ட செயற்குழு பிரபாகர், மாநில செயலாளர் சண்முகராஜா, பட்டியல் அணி மாநில தலைவர் பாலகணபதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முதுவை இளையராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story