அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கியது அறந்தாங்கியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது


அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கியது அறந்தாங்கியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 11 Jan 2021 12:27 AM GMT (Updated: 11 Jan 2021 12:27 AM GMT)

அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல பருவ மழை பெய்ததாலும், சுமார் 2.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அன்னவாசல், இலுப்பூர், பெருமநாடு, சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, வீரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை விவசாயிகளின் கண்ணீராக மாறியுள்ளது.

நீரில் மூழ்கியது

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிராக சிஆர் 1009, டீலக்ஸ், பொன்னி, கல்சர், அம்மன் உள்ளிட்ட வகையில் நெற்பயிர்களை பயிரிட்டனர்.

பொங்கல் பண்டிகையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து பெருமாநாடு பகுதி விவசாயிகள் கூறுகையில்:- நன்றாக பருவமழை பெய்ததால் ஆங்காங்கே கடன் வாங்கி நெற் பயிர்களை நடவு செய்தோம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருந்து பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி உள்ளன. இதுனால் வரை தங்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பொங்கல் அறுவடையின் போது மழை பெய்ததில்லை. இதுவரை நாங்கள் கண்டிராத அளவிற்கு தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

இதனால் நெற் பயிர்கள் அனைத்தும் அழுகி முளைத்துள்ளன, ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி பணியில் ஈடுபட்டோம் ஆனால் தற்போது பெய்த மழையால் 10 சதவீதம் கூட போட்ட பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் 10 சதவீதம் பயிர்களை கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.

மேலும் கடன் பெற்று விவசாய பணியில் ஈடுபட்டோம், தற்போது வாங்கிய கடனை எப்படி கட்ட போகிறோம் என்பதே தெரியவில்லை. தமிழக அரசு தங்கள் பகுதி விவசாயிகளின் நிலையை உணர்ந்து கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

வீட்டு சுவர் இடிந்து விழுந்தது

அறந்தாங்கி அருகே விஜயபுரத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் விஜயபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த லெட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் நேற்று பெய்த மழைக்கு இடிந்து கீழே விழந்தது. பகலில் சுவர் இடிந்து விழுந்ததால் எந்த பாதிப்பும் இல்லை.

Next Story