பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் பகுதியில் கரும்புகள் விற்பனை அமோகம்


பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் பகுதியில் கரும்புகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 11 Jan 2021 1:29 AM GMT (Updated: 11 Jan 2021 1:29 AM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் பகுதியில் கரும்புகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.

கரூர்,

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பினை விரும்பி சாப்பிடுவது உண்டு.

மேலும் பொங்கல் பண்டிகையன்று மண்பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகளை படையலிட்டும், அறுவடை செய்த நெற்கதிர்கள், நெல்லினை வைத்தும் வீடுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

விற்பனை சூடுபிடித்தது

அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் நகரில் உள்ள வெங்கமேடு மேம்பாலம், நகராட்சி அலுவலகம், தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன.

இன்னும் பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஒரு ஜோடி கரும்பு, உயரம் மற்றம் தடிமன் ஆகியவற்றிற்கு ஏற்ப ரூ.40, ரூ.50, ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விரும்பி வாங்கி செல்கின்றனர்

இதுகுறித்து கரூர் வெங்கமேடு பகுதியில் கரும்பு விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரமான காரவல்லியில் இருந்து கரும்புகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கரும்புகளை விலை இல்லாமல் கொடுத்து வந்தாலும், வழக்கம்போல் இந்த ஆண்டும் விற்பனை நன்றாக உள்ளது. கரூர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தாலும் பொதுமக்கள் விரும்பி வந்து கரும்புகளை வாங்கி செல்கின்றனர் என்றார்.

Next Story