பொதுமக்களுக்கு கிடைக்க 2 மாதங்கள் ஆகும்; கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் தயார்; கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்


குடும்ப நலத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு சென்று மந்திரி சுதாகர் ஆய்வு
x
குடும்ப நலத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு சென்று மந்திரி சுதாகர் ஆய்வு
தினத்தந்தி 11 Jan 2021 1:57 AM GMT (Updated: 11 Jan 2021 1:57 AM GMT)

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தடுப்பூசி கிடங்குகள்
கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் நாளை (அதாவது இன்று) காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி வினியோக பணி வருகிற 16-ந் தேதி தொடங்கும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார். முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த 3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நான் இன்று (நேற்று) தடுப்பூசி சேகரித்து வைக்கப்படும் கிடங்குகளை நேரில் ஆய்வு செய்தேன். பெங்களூரு மற்றும் பெலகாவியில் தடுப்பூசி குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இது மட்டுமின்றி சித்ரதுர்கா, கலபுரகி, தட்சிண கன்னடா, மைசூரு, பாகல்கோட்டையில் மண்டல தடுப்பூசி கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிடங்கு இருக்கிறது.

குளிர்பதன கிடங்குகள்
பெங்களூரு மாநகராட்சியில் மொத்தம் 50 மண்டலங்கள் உள்ளன. மாநிலத்தில் மொத்தம் 2,767 குளிர்பதன கிடங்கு சங்கிலித்தொடர் உள்ளது. இந்த கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மாநிலத்தில் 900 தடுப்பூசி பெட்டிகள் உள்ளன. தடுப்பூசிகள் முதலில் மண்டல கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பெங்களூருவில் 2 நகரும் குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இதில் ஒன்றில் 45 லட்சம் தடுப்பூசிகள் சேகரித்து வைக்க முடியும். கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான அனைத்து வகையான ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அது அடுத்த ஓரிரு நாளில் வரவுள்ளது. 24 லட்சம் ஊசி போட பயன்படுத்தப்படும் சிரஞ்சு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்க இன்னும் 2 மாதங்கள் ஆகும். இங்கிலாந்தில் இருந்து இன்று (நேற்று) காலை ஒரு விமானம் பெங்களூரு வந்துள்ளது. அதில் 289 பயணிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். தவறு செய்தவருடன் அரசியல்வாதியின் புகைப்படம் இருந்தால் அவருடன் அரசியல்வாதியை தொடர்புபடுத்தி குறை சொல்வது தவறு.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story