5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

பொங்கல் பண்டிகை முடிந்ததும் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழக ஆசிரியர் கூட்டணியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பள்ளிகளை திறக்க வேண்டும்

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதேபோல தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை முடிந்ததும் 5 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் தமிழக அரசு திறக்க உத்தரவிட வேண்டும்.

இந்தியா முழுவதும் சுமார் 85 கோடி மாணவ-மாணவிகள் பள்ளியை இழந்து நிற்கிறார்கள். இணையத்தில் கல்வி கற்பது குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டுவது போன்றதாகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தமிழக அரசு 17 பி என்ற சட்டத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.

வழக்குகள் ரத்து

போராட்டத்தின்போது நடந்த பேச்சுவார்த்தையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த தண்டனையும் அளிக்கப்படாது. ஆசிரியர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த உறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு கால பலன்களை பெற முடியாமலும், பதவி உயர்வு அடைய முடியாமலும் தவித்து வருகிறார்கள். எனவே, முதல்-அமைச்சர், ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த அரசுக்கு எதிராக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வேலை இல்லாத இளைஞர்களின் எதிர்ப்பு அலை வீசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு

முன்னதாக நடைபெற்ற மாநில நிர்வாகிகள் தேர்தலில் நம்பிராஜன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக வின்சென்ட் பால்ராஜ், பொருளாளராக சந்திரசேகரன், துணை தலைவர்களாக எழிலரசன், கனகராஜ் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளராக தமிழ் செல்வமும், மாநில துணை செயலாளர்களாக ராஜசேகரன், கணேசன் ஆகியோரும், மகளிரணி மாநில செயலாளராக ஈரோடு ரமா ராணியும், மாநில தலைமை நிலைய செயலாளராக ரமேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story