கும்பகோணத்தில் ரூ.25 கோடியில் 96 புதிய சாலைகள் கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


கும்பகோணத்தில் ரூ.25 கோடியில் 96 புதிய சாலைகள் கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2021 3:28 AM GMT (Updated: 11 Jan 2021 3:28 AM GMT)

கும்பகோணத்தில் ரூ.25 கோடியில் 96 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் துக்காம் பாளைய தெருவில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை பார்வையிட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள், கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டரிடம், கழிவுநீர் தேக்கத்தை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய சாலைகள்

கும்பகோணத்தில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய் பணிகள் முடிக்கப்பட்டு புதிய முறையில் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 96 புதிய சாலைகள் கும்பகோணம் நகரின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளும் விரைவில் புதிய சாலையாக மாற்றப்படும். துக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற காரணத்தினால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி விட்டது.

ஆணையருக்கு உத்தரவு

இதை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கும்பகோணம் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன். இனி இவ்வாறு அடைப்பு ஏற்படாதவாறு நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது கும்பகோணம் உதவி கலெக்டர் விஜயன், நகராட்சி ஆணையர் லட்சுமி பொறியாளர் ஜெகதீசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பொங்கல் பரிசு

ஆய்வை தொடர்ந்து கலெக்டர் கோவிந்தராவ் கும்பகோணத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்.

இதற்கான நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்கள் தேவேந்திரன் (பொறுப்பு), மேகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கும்பகோணம், பாபநாசம் பகுதியை சேர்ந்த 2,374 பேருக்கு பச்சை அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

Next Story