திருக்கோவிலூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் பதுக்கி வைத்து விற்பனை வியாபாரி உள்பட 2 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் பதுக்கி வைத்து விற்பனை வியாபாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2021 4:12 AM GMT (Updated: 11 Jan 2021 4:12 AM GMT)

திருக்கோவிலூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் மற்றும் சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் போலீசார் மேற்படி கிராமத்தில் மணியேந்தல் செல்லும் சாலையில் உள்ள குளக்கரை அரசமரத்தடியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(38) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி மதுபாட்டில்

இதில் அதே ஊரைச் சேர்ந்த சடையன் மகன் ஏழுமலை(55) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூறினார். இதையடுத்து ஏழுமலை வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 50 பெட்டிகளில் 1,285 புதுச்சேரி மது பாட்டில்களும், வீட்டின் முன்பு நின்ற காரில் 10 லிட்டர் சாராயம் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

விசாரணையில் அரகண்டநல்லூர் அருகே உள்ள வடகரைதாழனூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜீவ்காந்தி(25) என்பவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து ஏழுமலை வீட்டில் பதுக்கி வைத்து கிருஷ்ணமூர்த்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, ஏழுமலை ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 1,285 மதுபாட்டில்கள் மற்றும் காருடன் 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜீவ்காந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story