உளுந்தூர்பேட்டையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி


உளுந்தூர்பேட்டையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Jan 2021 5:27 AM GMT (Updated: 11 Jan 2021 5:27 AM GMT)

உளுந்தூர்பேட்டையில் காட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியின்போது தையல் கலைஞர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் முற்றுகைபோராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 5,400 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இதற்காக காலை 6 மணி முதல் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதி அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் பதிவு செய்துள்ள தையல் கலைஞர்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென அங்கு வந்து முற்றுகையிட்டு தங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் சரியான முறையில் பதில் கூறவில்லை என தெரிகிறது.

மறியல்செய்ய முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற தையல் கலைஞர்கள் மற்றும் சலவை தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தமிழக அரசு பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாகவும், மற்ற அமைப்பினருக்கு அரசு அறிவிக்கும் பட்சத்தில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி தையல் கலைஞர்கள், சலவை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்ய முயன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story