சம உரிமை, சம வாய்ப்பு கிடைத்திட தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்; நடிகை கவுதமி பிரசாரம்


விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் நடிகை கவுதமி கிராம மக்களிடம் பேசிய போது
x
விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் நடிகை கவுதமி கிராம மக்களிடம் பேசிய போது
தினத்தந்தி 11 Jan 2021 5:31 AM GMT (Updated: 11 Jan 2021 5:31 AM GMT)

உங்களுக்கான சம வாய்ப்பும், சம உரிமையும் அனைத்து துறைகளிலும் கிடைத்திட நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தரவேண்டுமென நடிகை கவுதமி கேட்டுக்கொண்டார்.

பொங்கல் விழா
விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் முன்பு மாவட்ட பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் கிராம மக்களுடன் சேர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் நடிகை கவுதமி பொங்கல் விழா கொண்டாடினர். 

அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு, இளைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

சம உரிமை
குடும்பத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க வேண்டும்.இதற்கு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் உங்களுக்கான வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். உங்கள் உரிமையை பிறர் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. பா. ஜனதா கட்சி தமிழகத்தில் ஆதரவு பெற்றுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு
எதிர்வரும் தேர்தலில் உங்களுக்கான சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க பா.ஜனதாவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். நான் அடுத்து உங்களை சந்திக்கும் போது உங்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக பேசுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பெண்கள் பாதுகாப்புக்கான பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் இன்னும் கடினமான சட்டங்கள் தேவை. பொள்ளாச்சி பாலியல் குற்றவியல் சம்பவத்தில் அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

போட்டியா?
வரவிருக்கும் தேர்தலில் பா.ஜனதா தலைமை அனுமதித்தால் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அவர் தனக்கு வேறு நிறைய பொறுப்புகள் உள்ளதாகவும், அதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் ராஜபாளையம் தொகுதி தனக்கு கொடுக்கப்பட்ட உள்ளதாகவும், பிரசார பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார். இதில்பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.சந்திரன், கோவில் நிர்வாகிகள் காமாட்சி, ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் விழா நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story