பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை


பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்தால் 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 Jan 2021 6:22 AM GMT (Updated: 11 Jan 2021 6:22 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வங்கா நரியை பிடித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் எச்சரித்துள்ளார்.

சேலம்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகள் வராமல் இருக்கவும் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டை நடத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக பொங்கல் பண்டிகை முடிந்து கரிநாளன்று பொதுமக்கள் காட்டுக்குள் சென்று வங்கா நரியை வலைவிரித்து பிடித்து வருவார்கள். பின்னர் ஊரிலுள்ள கோவில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்தி வங்கா நரியை ஓடவிட்டு ஜல்லிக்கட்டு போல் நடத்துவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய விழாவை நடத்துவதை கிராம மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வங்கா நரியை பிடித்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு கிராமத்திலும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தனிப்படைகள்

இருப்பினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வங்கா நரிகளை பிடிப்பதை தடுக்க மாவட்ட வன அலுவலர் முருகன் தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உதவி வனப்பாதுகாவலர்கள் முருகன், யோகேஷ்மீனா ஆகியோர் தலைமையில் வனச்சரகர்கள், வனக்காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பை தொடங்கி உள்ளனர்.

இந்த தனிப்படையினர் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கருமந்துறை மற்றும் கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை முடிந்து அடுத்த நாட்களில் வங்கா நரிகளை பிடிக்க வேட்டையை தொடங்குவார்கள் என்பதால் கிராமங்களில் ரகசியமாக வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

7 ஆண்டு சிறை தண்டனை

இது குறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும் போது, ‘வங்கா நரிகளை வலைவிரித்து பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது குற்றமாகும். அதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளோம். இதுபோன்ற குற்றத்தில் யாராவது ஈடுபடுவது தெரியவந்தால் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story