லஞ்ச புகாரில் சென்னையில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை


லஞ்ச புகாரில் சென்னையில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 12 Jan 2021 1:13 AM GMT (Updated: 12 Jan 2021 1:13 AM GMT)

லஞ்ச புகாரில் சென்னையில் சிக்கிய சுற்றுச்சூழல் கண்காணிப்பு அதிகாரியின் சொந்த ஊரான திருமயத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை,

சென்னையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன். அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1 கோடியே 37 லட்சம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் வசித்து வருவது சென்னை என்றாலும், அவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டி ஆகும். திருமயத்தில் கோட்டை பசு மட வீதியில் அவருக்கு சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் சோதனை நடத்த கோர்ட்டில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த நிலையில் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் சோதனை நடத்த சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில், 2 போலீசார் நேற்று வந்தனர். அவர்களுடன் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, பீட்டர் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.

வீட்டில் பாண்டியன் இருந்தார். அவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வீட்டின் முன் பக்க கதவை அடைத்தனர். வீட்டில் இருந்த அறைகளில் சோதனையிட்டனர். காலை 6.45 மணி முதல் பகல் 11 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர் விசாரணை

சோதனை முடிந்து வெளியே வரும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பைகளில் சிலவற்றை எடுத்து வந்தனர். அந்த பைகளில் ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘திருமயத்தில் உள்ள அவரது வீடு கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது என தெரிகிறது. இந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து தங்குவது வழக்கம். அதனால் இந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றனர்.

மேலும் பாண்டியனின் உறவினர்கள் வீடுகளிலும் தேவைப்பட்டால் சோதனை நடைபெறும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். லஞ்ச புகாரில் சிக்கிய பாண்டியனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story