பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 12 Jan 2021 2:02 AM GMT (Updated: 12 Jan 2021 2:02 AM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

திருச்சி,

திருச்சி மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் நலன் கருதி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 19-ந் தேதி வரை தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட உள்ளன. அதன்படி திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா-மீனா தியேட்டர் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்படும். புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்படுகிறது.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம்போல் மத்திய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும்.

நிழற்குடை

மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுற்றுப் பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் காவல்துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொது கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது.

சட்டப்படி நடவடிக்கை

வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபற்றிய தகவல்களை காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கும் மாநகர காவல் அலுவலகம் வாட்ஸ்-அப் எண்ணுக்கு (9626273399) தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Next Story