கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது; புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்


கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது; புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2021 4:04 AM GMT (Updated: 12 Jan 2021 4:04 AM GMT)

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் 28 நாட்கள் மது அருந்தக்கூடாது என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமே‌‌ஷ் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவது தொடர்பாக 2 முறை ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

அடுத்ததாக பிற முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழ் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக 13 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர். அதாவது 7 ஆயிரம் தனியார் ஊழியர்களும், 6 ஆயிரம் அரசு ஊழியர்களும் இதில் அடங்கும்.

மது அருந்தக்கூடாது
இதற்காக 145 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்து 30 நிமிடம் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாவிட்டால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசி 2 முறை போடப்பட வேண்டும். அதாவது முதல் ஊசிபோட்ட 28-வது நாள் அடுத்த ஊசி போடப்பட வேண்டும். 2-வது ஊசி போட்டுக்கொண்டால்தான் எதிர்ப்பு சக்தி வரும். முதல் தடுப்பூசி போட்ட பின் அடுத்ததாக 2-வது தடுப்பூசி போட உள்ள 28 நாட்கள் வரை மது அருந்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story