கோபி அருகே அரசு மையங்களில் நெல் கொள்முதல் செய்ய காலம் தாழ்த்துகிறார்கள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்


நெல் கொள்முதல் மையத்தை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்பானுமதி ஆய்வு செய்த போது
x
நெல் கொள்முதல் மையத்தை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்பானுமதி ஆய்வு செய்த போது
தினத்தந்தி 12 Jan 2021 5:54 AM GMT (Updated: 12 Jan 2021 5:54 AM GMT)

கோபி அருகே அரசு மையங்களில் நெல் கொள்முதல் செய்ய காலம் தாழ்த்துகிறார்கள் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தார்கள்.

நெல்கொள்முதல் நிலையம்
கோபி அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கோபி பகுதியில் சாகுபடி செய்யப்படும் விதைநெல் ரகங்களுக்கு நல்ல முளைப்புத்திறன் இருப்பதால், தமிழகம் முழுவதும் விற்பனைக்காக விதை நெல் அனுப்பப்படுகிறது. தற்பொழுது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

17 சதவீத ஈரப்பதம்
இந்த மையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அரசால் நிர்ணயிக்கப்பட்ட 17 சதவீத ஈரப்பத்துடன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இங்கு கொண்டுவரப்படும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல், 10 முதல் 15 நாட்கள் வரை காலம் தாழ்த்துவதாக விவசாயிகள், அதிகாரிகளுக்குப் புகார் செய்திருந்தனர்.

அதன் பேரில், ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி புதுக்கரைப்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை ஆய்வு செய்தார்.

குற்றச்சாட்டு
அப்போது விவசாயிகள் கொள்முதலுக்காக ஏற்கனவே வைத்திருந்த நெல் முளைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்த விவசாயிகள் கொள்முதல் மையத்தில் காலம் தாழ்த்தி நெல்லை கொள்முதல் செய்வதாலும், திறந்த வெளியிலேயே நெல் மூட்டைகளை போட்டு வைத்திருப்பதாலும், மழையில் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.

இதுகுறித்து ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி கூறும்போது, 'கடந்த 2 ஆண்டுகளாக புதுக்கரைப்புதூரில் 2 நெல் கொள்முதல் மையங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டதால், நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

நடவடிக்கை
ஆனால், இந்த ஆண்டு ஒரு மையம் புதுக்கரைப்புதூரிலும், மற்றொரு மையம் பொலவக்காளிபாளையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 17 சதவீத ஈரப்பதத்துடன் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால், வயல்களிலிருந்து வரும் நெல்லை சில நாட்கள் காயவைத்தால் மட்டுமே குறிப்பிட்ட ஈரப்பதத்துடன் இருக்கும். நாட்கள் அதிகரிக்கும் போது நெல் முளைத்து விடுகிறது. கோபி பகுதியில் எந்தெந்த மையங்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதோ? அங்கெல்லாம் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Next Story