காவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்தால் ஊர்க்கூட்டம் போட்டு தடுக்கலாம் - வடக்கு மண்டல ஐ.ஜி. பேச்சு


காவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்தால் ஊர்க்கூட்டம் போட்டு தடுக்கலாம் - வடக்கு மண்டல ஐ.ஜி. பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2021 11:10 AM GMT (Updated: 12 Jan 2021 11:10 AM GMT)

காவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்தால் ஊர்க்கூட்டம் போட்டு தடுக்கலாம், என கிராம விழிப்புணர்வு காவல் குழு அறிமுக கூட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் பேசினார்.

காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் குழு அறிமுக கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கினார். அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் பங்கேற்று காவேரிப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் குழு அறிமுக கூட்டத்தில் காவேரிப்பாக்கத்துக்கு போலீசார் ரவி, நாராயணன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து காவலர்கள் நேரில் வந்து விசாரணை செய்துள்ளார்களா? அப்படி இல்லையென்றால் இனி வரும் காலங்களில் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் நேரில் வந்து விசாரிப்பார்கள். இவர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் வருவார்கள். அவர்களிடம் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

அதன் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் நேரில் வந்து மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகிய இரு தரப்பிலும் விசாரணை செய்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள். காவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்தால் ஊர்க்கூட்டம் போட்டு தடுக்கலாம் அல்லது நியமனம் செய்த காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு ஐ.ஜி. நாகராஜன் பேசினார்.

கோரிக்கை மனு

இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஐ.ஜி.யிடம் வழங்கினர். கூட்டத்தில் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி நன்றி கூறினார். முன்னதாக அவளூர் போலீஸ் நிலையம் சார்பில் ஓச்சேரியில் கிராம விழிப்புணர்வு காவல் குழு அறிமுக கூட்டம் நடந்தது.

Next Story