கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்திய 10 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவுப்படி கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் சாலையை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தியபோது அதில் இருந்த டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடினார்கள். இதைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த போது அதில் 10.4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அந்த அரிசி விழுப்புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரி மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். அதை மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து லாரி கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story