பழைய போர்வெல் குழாய்களை எடுத்துச்சென்றதை கண்டித்து - பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு


பழைய போர்வெல் குழாய்களை எடுத்துச்சென்றதை கண்டித்து - பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு
x
தினத்தந்தி 12 Jan 2021 1:23 PM GMT (Updated: 12 Jan 2021 1:23 PM GMT)

ராசிபுரம் அருகே பழைய போர்வெல் குழாய்களை எடுத்துச்சென்றதை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சியில் இருந்த பழைய போர்வெல் குழாய்களை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்த குழாய்களை பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும், அறிவிப்பு எதுவும் இல்லாமலும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்து சென்றதற்கு கண்டனம் தெரிவித்து பட்டணம் பேரூர் முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மாணவரணி அமைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேற்று காலையில் பேரூராட்சியின் பிரதான கதவுக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் குமார், இன்ஸ்பெக்டர் ரம்யா, வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அலுவலகம் வழக்கம்போல் செயல்பட்டது.

பேரூராட்சியில் பயனில்லாத குழாய்கள் முறையாக ஏலம் விடப்பட்டு, அதன் பிறகுதான் ஏலம் எடுத்தவர் அவற்றை எடுத்துச்சென்றதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட சம்பவத்திற்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை என்றும், பொதுமக்கள் சார்பில்தான் பூட்டு போடப்பட்டதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

Next Story