மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி - ராஜபாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி - ராஜபாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2021 2:04 PM GMT (Updated: 12 Jan 2021 2:04 PM GMT)

மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே திரண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கரும்பு மற்றும் நெற்கதிர்களை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர்.

இவர்களது ஊர்வலம், நீதிமன்ற சாலையில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகம் முன் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைத்து தாலுகாவிலும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அம்மையப்பன், தென்னை விவசாயம் மாவட்ட செயலாளர் முத்தையா, நகர செயலாளர் முருகேசன் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து, கடந்த 2 வருடங்களாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் வசூல் செய்து தர வேண்டும்.

பிரதமரின் விவசாய நிதி திட்டத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தென்னை விவசாயத்திற்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தின் முடிவில் விவசாய சங்கம் சார்பில் வேளாண்மை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

Next Story