மானாமதுரையில் வாலிபர் கொலை: 4 பேர் கோர்ட்டில் சரண்


மானாமதுரையில் வாலிபர் கொலை: 4 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 12 Jan 2021 2:59 PM GMT (Updated: 12 Jan 2021 2:59 PM GMT)

மானாமதுரையில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

முதுகுளத்தூர்,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருள்நாதன் என்கிற மைனர் மணி (வயது 29) இவரது நண்பர் வினோத் கண்ணன். இவர் மானாமதுரை உடைகுளம் கிராமத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த 9-ந்தேதி மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் மைனர் மணி பரிதாபமாக உயிரிழந்தார். வினோத் கண்ணன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழக்குதொடர்பாக மதுரை காமராஜ்புரத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் மிதுன் மாணிக்கம் (21), மானாமதுரை தெற்கு ரத வீதியை சேர்ந்த தேசிகன் மகன் வசந்த் சரண் (22), திருப்பாச்சி மருதுபாண்டி தெரு முனியாண்டி மகன் ராஜ் குமார் (22) மானாமதுரை செக்கடி தெரு பூமிநாதன் மகன் சங்கர் (19) ஆகிய 4 பேரும் முதுகுளத் தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story