தொடர் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் - நிவாரணம் வழங்க கோரிக்கை


தொடர் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் - நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2021 3:53 PM GMT (Updated: 12 Jan 2021 3:53 PM GMT)

மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதூர்,

மதுரை அருகே உள்ள கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ெவளிச்சநத்தம், சத்திரப்பட்டி, மஞ்சம்பட்டி, குலமங்கலம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் மணிகள் முற்றி கடந்த சில நாட்களாக நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மாவட்டத்தில் பெய்த தொடர் மழை பெய்தது. இதனால் விவசாய விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களில் மழைநீர் தேங்கியதால் அவை தரையில் சாய்ந்து சேதமாகி உள்ளது. விளைந்த நெற் கதிர்கள் பல வயல்களில் அடியோடு சாய்ந்து கிடப்பதால், எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெற்பயிர்கள் சாய்ந்து மகசூல் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுபற்றி வெளிச்சநத்தத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறுகையில், கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு தயாரான நிலையில், விளைந்த நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்து கிடக்கின்றன. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்தநிலையில் நேற்று பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் நெற் பயிர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்பதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு கன மழை பெய்து வருகிறது. அதனால் மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, மேலூர் உள்பட மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. சில நெற்பயிர்கள் முழுவதுமாக தரையில் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செய்துள்ள விவசாயிகள் தற்போது என்ன செய்வதன்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

குலமங்கலம், சமயநல்லூர், தேனூர், ஊர்மெச்சிகுளம் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாய பாதிப்பிற்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story