இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காதலன் சரிவர செல்போனில் பேசாததால் விபரீத முடிவு
மதுரவாயல் அருகே காதலன் சரிவர செல்போனில் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 18). போரூரில் உள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அய்யப்பன் தாங்கலை சேர்ந்த மோகன் (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலி பவித்ரா வீட்டிற்கு பதட்டத்துடன் வந்த அவரது காதலன் மோகன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பவித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு வெளியே கொண்டு வந்த நிலையில், அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் பவித்ராவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மலர்ந்த காதல்
இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் இறந்து போன பவித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பவித்ரா மற்றும் மோகன் ஆகிய இருவரும் துணிக்கடையில் வேலை செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தில் காதலித்து வந்துள்ளனர். தற்போது மோகன் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பவித்ராவிடம் சரிவர செல்போனில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
மேலும் நேற்று முன்தினம் தன்னை வெளியே அழைத்து செல்லும்படி பவித்ரா கேட்டதாகவும், தற்போது வேலையில் இருப்பதால் அழைத்து செல்ல முடியாது என மோகன் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த பவித்ரா தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மோகன் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பவித்ரா போனை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story