மராட்டியத்தில் 511 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
மராட்டியத்துக்கு 9 லட்சத்து 63 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைத்துள்ளது என்றும், 511 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்றும் சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை,
நாட்டில் முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக நேற்று நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் மூலமும், மும்பைக்கு சாலை மார்க்கமாகவும் 56.5 லட்சம் தடுப்பூசி புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியிருப்பதாவது:-
511 மையங்களில்...
இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து மராட்டியத்திற்கு 9 லட்சத்து 63 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சேர்ந்து உள்ளது. இந்த தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட உள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 84 ஆயிரம் மருத்துவ பணியாளர்களின் தரவு சேகரிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பம் உள்ள முன்கள பணியாளர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் உள்ள 511 மையங்களில் நடைபெறும்.
இந்த அனைத்து மையங்களிலும் மின்சாரம், இன்டர்நெட் மற்றும் வெப்காஸ்டிங் சேவைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story