புனேயில் இருந்து மும்பைக்கு லாரிகளில் வந்த கொரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்


புனேயில் இருந்து மும்பைக்கு லாரிகளில் வந்த கொரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2021 2:30 AM GMT (Updated: 13 Jan 2021 2:30 AM GMT)

கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது

புனே, 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கு வருகிற 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

முன்கள பணியாளர்கள்

முதலில் டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கும், அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோயாளிகள் என 27 கோடி பேருக்கும் தடுப்புசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஆகும்.

3 கோடி பேருக்கு 6 கோடி தடுப்பூசிக்கு இந்திய சீரம் நிறுவனத்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் நேற்று முன்தினம் மத்திய அரசு ஆர்டர் வழங்கியது நினைவுகூரத்தக்கது.

வினியோகம் தொடக்கம்

இந்த தடுப்பூசிகளை நாடு முழுக்க விமானங்களில் எடுத்துச்சென்று வினியோகிக்கும் பணி நேற்று வெற்றிகரமாக தொடங்கியது. முதலில் புனே நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், சென்னைக்கும் ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோஏர் நிறுவன விமானங்கள் மூலம் தடுப்பூசி வந்து சேர்ந்தது. 2இதை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி, டுவிட்டரில் தெரிவித்தார். இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், இன்று ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களின் 9 விமானங்கள் மூலம் புனேயில் இருந்து 56.5 லட்சம் டோஸ் தடுப்பூசி, டெல்லி, சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, ஷில்லாங், ஆமதாபாத், ஐதராபாத், விஜயவாடா, புவனேசுவரம், பாட்னா, பெங்களூரு, லக்னோ. சண்டிகார் நகரங்களுக்கு தடுப்பூசி செல்கிறது என குறிப்பிட்டுள்ளார். புனேயில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்டது.

மும்பைக்கு சாலை மார்க்கமாக...

முன்னதாக புனே சீரம் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் 478 பெட்டிகளில் தடுப்பூசிகள் குளிர்சாதன வசதி கொண்ட லாரிகள் மூலம் விமான நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. ஒவ்வொரு பெட்டியும் தலா 32 கிலோ எடை கொண்டதாகும். இந்த லாரிகள் புறப்படுவதற்கு முன்பாக பூஜை நடைபெற்றது.

அதேவேளையில் புனேயில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக லாரிகளில் தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டன. இந்த லாரிகள் கூல் எக் கோல்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானவை என தகவல்கள் கூறுகின்றன.

இந்த தடுப்பு மருந்துகள் மும்பையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 4.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி

புனே இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 4.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி வாங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி ஒன்றின் விலை வரி உள்பட ரூ.210 ஆகும்.

4.5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.1,176 கோடி வழங்கும்.

Next Story