ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் மந்திரி கோபாலய்யா தகவல்


ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் மந்திரி கோபாலய்யா தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2021 3:13 AM GMT (Updated: 13 Jan 2021 3:13 AM GMT)

பாகல்கோட்டை உள்பட 4 மாவட்டங்களில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டசத்து பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக உணவு மற்றும் பொது வினியோகத் துறை மந்திரி கோபாலய்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கலபுரகி, விஜயாப்புரா உள்பட 4 மாவட்ட மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பெண்கள், சிறுவர்கள் அவதிப்படுகின்றனர். 4 மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு அங்கனவாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் முதல் 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க அரிசி வினியோகிக்கப்பட உள்ளது.

ஏப்ரல் முதல் அமல்

ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள மாநிலங்களில் ஊட்டச்சத்து உள்ள அரிசி உள்பட ஊட்டச்சத்து உணவு பொருட்களை வினியோகிக்க மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் ஊட்டசத்து பொருட்களை வினியோகிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு 2019-ம் ஆண்டு ரூ.1,746 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஊட்டச்சத்து, வைட்டமின்,இரும்பு சத்து மிக்க அரிசியுடன், சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் மாவு வினியோகிக்கப்படும். இவற்றுடன், கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் மாவு வினியோகிக்கப்படும். இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story