மின்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


மின்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2021 3:36 AM GMT (Updated: 13 Jan 2021 3:36 AM GMT)

மின்துறை ஊழியர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

புதுச்சேரி,

புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கிவிட்டன. தனியார்மய முடிவுக்கு புதுவை அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும் தனியார்மய முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசு எச்சரிக்கை

மின்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தால் பணியிடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மின்துறை செயலாளர் தேவே‌‌ஷ் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

2-வது நாளாக...

ஆனால் அவரது எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மின்துறை ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் கூடி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மின் ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் விளக்குகள் பழுதானால் சரிசெய்வது, மின்கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Next Story