நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த பலத்த மழை குண்டும் குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் குண்டும் குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்பை, கடையம், ஆலங்குளம், நாங்குநேரி, மூைலக்கரைப்பட்டி, கொண்டாநகரம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதேபோல் அணைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 2.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது.
சேறும் சகதியுமாக மாறியது
இதனால் தாழ்வான பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் சேறும் சகதியுமாக மாறியது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் முழுவதும் சில நேரங்களில் லேசான மழை தூறலும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த தொடர் மழையால் நெல்லை டவுன் பகுதியில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி வாகனம் செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.
நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதேபோல் பாளையங்கோட்டை, சமாதானபுரம், மனகாவலன்பிள்ளை நகர், பாலபாக்யா நகர் வடக்கு பகுதியிலும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story