சேலத்தில், கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திய தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது


சேலத்தில், கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திய தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2021 2:43 PM GMT (Updated: 13 Jan 2021 2:43 PM GMT)

சேலத்தில் கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செபஸ்டீன் (வயது 19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஸ்டீபன்ராஜ் (30). இரு குடும்பத்தினருக்கும் இடையே நடைபாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், இவரது மனைவி சுந்தரி, மகன் ஸ்டீபன் ராஜ் மற்றும் இவர்களது உறவினர் ராஜா (54) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் செபஸ்டீனை பீர் பாட்டிலை உடைத்து குத்தி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வீராணம் போலீசில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், அவரது மகன் ஸ்டீபன் ராஜ், உறவினர் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story