குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க 17-ந்தேதி வரை தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க 17-ந்தேதி வரை தடை
x
தினத்தந்தி 13 Jan 2021 11:25 PM GMT (Updated: 13 Jan 2021 11:25 PM GMT)

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வருகிற 17-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி, 2-வது நடைபாலம் வரையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து பேரிரைச்சலுடன் ஆக்ரோஷமாக கொட்டியது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேனருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளும் மறையும் அளவுக்கு பேரருவியாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவிக்கு செல்லும் பாதை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அருவிகளுக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருவிகளுக்கு செல்லும் அனைத்து பாைதகளிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பாதுகாப்பு கருதி வருகிற 17-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story