கரூர் பகுதியில் தொடர் மழையால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்


கரூர் பகுதியில் தொடர் மழையால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 14 Jan 2021 12:18 AM GMT (Updated: 14 Jan 2021 12:18 AM GMT)

கரூர் பகுதியில் தொடர் மழை பெய்ததால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

கரூர், 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. வீடுகளில் இன்று பொங்கல் பானையில் பச்சரிசியில் பொங்கலிட்டு, கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதையொட்டி பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமானது.

இந்த நிலையில் நேற்றும் மழை பெய்தது. இதனால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இருப்பினும் கரூரில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக ஜவகர்பஜார் உள்ளிட்ட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இருந்தது. கரூர் நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம் அருகே, காமராஜர் மார்க்கெட், கோவை ரோடு, வெங்கமேடு உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆங்காங்கே கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதேபோல மஞ்சள் கொத்துகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பொங்கலிடுவதற்காக மண்பானைகளை பொதுமக்கள் தேடிப்பிடித்து வாங்கி சென்றனர். பூஜைக்காக பழங்கள், வாழைப்பழம், தேங்காய் போன்ற பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

கரூர் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் நேற்று காலை முதலே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறிகளை பரப்பி வைத்து வியாபாரிகள் வியாபாரத்தை தொடங்கினர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக ஒரே இடத்தில் வாங்கி சென்றனர்.

பூக்களுக்கு கடும் கிராக்கி

கரூர் ரெயில்வே ஜங்ஷன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிகவளாகம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த பூ மார்க்கெட்டிற்கு, மாயனூர், தளவாபாளையம், கூடலூர், பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து கொண்டு விற்பனைக்காக நேற்று காலை முதலே கொண்டு வந்தனர். பனிப்பொழிவு உள்ளிட்டவற்றின் காரணமாக மல்லிகை பூ உள்ளிட்ட அத்தியாவசிய பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் அவை வழக்கத்தை விட விலையேற்றம் கண்டன. மார்க்கெட் பூ கடைகளில் நடந்த பொது ஏலத்தில் அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1, 800 வரை விலைபோனது. வீட்டில் பூ கட்டி விற்கும் பெண்கள், பூக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை ஏலம் எடுக்க ஆர்வத்துடன் குவிந்ததால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

விலை விவரம்

கரூர் பூ மார்க்கெட்டில் விலை போன பூக்களின் விவரம் வருமாறு (ஒரு கிலோ) :- முல்லை பூ - ரூ.1, 500, ஜாதிப்பூ - ரூ.1, 200, அரளிப்பூ - ரூ.250, ரோஜாப்பூ - ரூ.200, செவ்வந்தி - ரூ.130, சம்மங்கி - ரூ.150, மரிகொழுந்து 1 கட்டு - ரூ.40, துளசி 1 கட்டு - ரூ.10 என்கிற விலையில் விற்பனையானது. வியாபாரிகள் வாங்கி சென்று வீட்டில் வைத்து அவற்றை மாலையாக கோர்த்து விற்பனை செய்யும் போது இன்னமும் விலைஅதிகரிக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை என பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நொய்யல் பகுதிகளில் பூக்களை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூ வியாபாரிகள் வந்திருந்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.2800-க்கும், முல்லைப்பூ ரூ.2700-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், செவ்வந்திப்பூ ஒரு 300-க்கும், ரோஜா ரூ.300-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.15 க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.15-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story