திருமூர்த்தி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை: பாலாற்றில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ள அபாய எச்சரிக்கை


திருமூர்த்தி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை: பாலாற்றில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2021 3:07 AM GMT (Updated: 14 Jan 2021 3:07 AM GMT)

நீராதாராங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பலாாற்றில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தளி, 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாரு, உப்புமண்ணம்ஓடை,, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. இது தவிர அப்பநீராரு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கிவருகிறது. இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.

அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கினர் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்பட்டு அணை நிரம்பும் போது மேற்கு பகுதியில் உள்ள ஷட்டர்கள் வழியாக உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருமூர்த்தி அணையின் நீர் ஆதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்இருப்பும் 2 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மதியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் காண்டூர் கால்வாயில் வந்துகொண்டிருந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மண்டல தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி ஆகியோர் திருமூர்த்தி அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அங்குள்ள ஷட்டர்கள் வழியாக உபரிநீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பாலாற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையில் 58.45 அடி (மொத்த கொள்ளவு 60 அடி) உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1197 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அமராவதி அணை

இதேபோன்று உடுமலையை அடுத்த அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணையிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையில் 89.18 அடி (மொத்த கொள்ளளவு 90 அடி) உயரத்திற்கு தண்ணீர் உள்ளது அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் 9மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும் நீர் வரத்தை உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story