சாத்தியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


சாத்தியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 3:22 AM GMT (Updated: 14 Jan 2021 3:22 AM GMT)

பாலமேடு அருகே சாத்தியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சாத்தியாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழையில்லாமல், வறண்டு போய் காட்சியளித்தது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் இப்பகுதி பாசன விவசாயிகளின் கடும் முயற்சியாலும் இந்த அணை முழு கொள்ளளவு 29 அடியை எட்டி தண்ணீர் மறுகால் பாய்கிறது.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலையில் சாத்தியாறு அணை திறக்கப்பட்டது. பின்னர் திறக்கப்பட்ட தண்ணீரில் பூக்களை அமைச்சர் உள்ளிட்டவர்கள் தூவினர்.

பாசன வசதி

தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இந்த அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வரத்து கால்வாய் மூலம் வந்து கொண்டிருக்கிறது. அதே தண்ணீர் அணையிலிருந்து வெளியேறி செல்கிறது. அத்துடன் மறு கால் தண்ணீரும் இத்துடன் சேர்ந்து போகிறது. இந்த அணையின் மூலம் கீழச் சின்னம்பட்டி, எர்ரம்பட்டி, சுக்காம்பட்டி, கோவில்பட்டி, அய்யூர், முடுவார்பட்டி உள்பட 11 கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் 20 நாட்கள் முறை வைத்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1500 ஏக்கர் வரை பாசன வசதி பெறும்.

முன்னதாக இந்த அணை திறப்பின்போது பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், துணை செயற்பொறியாளர் போஸ், தாசில்தார் பழனிக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராம்குமார் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story